பள்ளியில் நீங்கள் கற்றுக்கொள்ளாத 18 அறிவியல் உண்மைகள்

tamil science news tamiluniverse

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு, தனிம அட்டவணை, மற்றும் மரபு இழை படியெடுத்தல் (DNA Replication) போன்ற சில அற்புதமான விஞ்ஞானங்களைப் பற்றி உயர்நிலைப் பள்ளிகளில் நாம் கற்றுக்கொள்கிறோம்.

நாம் கற்கும் அறிவானது, நாம் படிப்பதற்கான எல்லா விடயங்களுக்கும் அடித்தளங்களை அமைக்கிறது. ஆனால் அறிவியல் கண்டிப்பாக உயர்நிலை பள்ளியோடு முடிந்துவிடாது. அறிவியலில் அடுத்தடுத்த கட்டங்களில் நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

இந்த விசித்திரமான அறிவியல் உண்மைகள் உலகம் உண்மையிலேயே ஓர் அற்புதமான மற்றும் மர்மமான இடம் என்பதை நிரூபிக்கின்றன.

1. விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட பூமியில் அதிக மரங்கள் உள்ளன

NASA வல்லுனர்கள் பால்மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை இருக்க முடியும் என நம்புகின்றனர். இருப்பினும், 2015 இல் வெளியிடப்பட்ட நேச்சர் எனும் பத்திரிகையில் உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை 3.04 ட்ரில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2. ஆக்ஸிஜனுக்கும் நிறம் உள்ளது

air bubbles in the form of “O2” in the water

ஒரு வாயுவாக, ஆக்சிஜன் வாசனையும் நிறமும் அற்றது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3. இந்த ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் ஆவர்த்தன (Periodic Table) அட்டவணையில் இல்லை

அந்த எழுத்து J. ஆம், ஆவர்த்தன அட்டவணையில் எந்தவொரு தனிமத்திலும் (element) இவ்வெழுத்து காணப்படாது.

4. வாழைப்பழங்களிலும் கதிர்வீச்சு வெளியாகின்றது

வாழைப்பழங்களில் பொட்டாசியம் காணப்படுகின்றன. பொட்டாசியம் சிதைவடையும் போது, அவை சிறிதளவு கதிரியக்கத்தை உருவாக்குகின்றன. ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கதிரியக்க விஷம் மனித உடலை பாதிக்க ஒரே நேரத்தில் 1 கோடி வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும்.

5. குளிர்ந்த நீரைவிட வெப்பமான நீர் வேகமாக உறைகிறது

இந்த உண்மை முரண்பாடாகத் தோன்றினாலும், இது Mpemba effect எனப்படும் ஒரு விளைவினால் நடைபெறுகின்றது என டான்சானிய மாணவர் எராஸ்ஸோ பெம்பா கண்டுபிடித்துள்ளார். இவர் தனது ஆசிரியரிடம் சூடான ஐஸ் கிரீம் கலவை குளிரான ஐஸ் கிரீம் கலவையை விட விரைவாக உறைவதாக கூறியுள்ளார். இப்போது விஞ்ஞானிகள் இக்கூற்றை நம்புகிறார்கள், ஏனென்றால் நீர் சூடாக இருக்கும்பொழுது நீர்த்துகள்களின் இயல்பு விரைவாக உறையும் நிலைக்கு மாறுகின்றது. இது சரி என நிரூபிக்கப்பட்டால், இந்த கண்டுபிடிப்புகள் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, அதிகமான வெப்பத்தை வெளிப்படுத்தும் மின்னணு சாதனங்களை குளிர்விக்கலாம்.

6. குளிர்ந்த நீர் வெப்பமான நீரை விட வேகமாக சூடாகின்றது

Mpemba விளைவை ஆராயும் ஆராய்ச்சியாளர்களே இதையும் கண்டுபிடித்துள்ளனர். இதனை தலைகீழ் Mpemba விளைவு என அவர்கள் பெயரிட்டனர்.

7. மனிதனின் கூர்ப்புக்கும் பூஞ்சைக்கும் (fungus) தொடர்புள்ளது

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் 2015 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு மனிதர்கள் தாவரங்களில் இருந்து வந்த மரபணுக்களில் உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் ஆய்வாளர்கள், மனித மரபணுக்களில் 1 சதவிகிதம் தாவரங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று ஏற்றுக்கொள்கிறார்கள்.

8. எமது உடலிலுள்ள DNA இன் எண்ணிக்கை!

மனித மரபணுக்களில் 3 பில்லியன் சோடிகளுக்கும் அதிகமான அடிப்படை டி.என்.ஏ க்கள் உண்டு என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மனித உடலில் உள்ள 10 டிரில்லியன் செல்கள் ஒவ்வொன்றிலும் அந்த மரபணுவின் ஒரு முழு நகல் உள்ளது. அந்த டி.என்.ஏ அனைத்தையும் வரிசையாக இணைத்தால், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தின் 100 மடங்கு நீளமாக இருக்கும்.

9. வேறு கிரகங்களில் வைர மழை பெய்யக்கூடும்

வைரங்களும் பால்வீதியிலுள்ள விண்மீன்களும் சிறந்த நண்பர்கள். நெப்டியூன், யுரேனஸ், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களில் வைரங்கள் உற்பத்தியாகக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இந்த நான்கு கிரகங்களிலும் உள்ள வளிமண்டலங்களிலுள்ள கார்பன் அணுக்கள் தீவிர அழுத்தத்தினால் படிகமாக மாறி அவை வைரங்களாக மாறக்கூடியன. ஆய்வகத்தில் இதுபோன்ற அழுத்த நிலைமைகளை உருவாக்கி, நெப்டியூன் மற்றும் யுரேனஸில் இது ஏற்படுமென விஞ்ஞானிகள் நிரூபித்து காட்டியுள்ளனர். ஒர் ஆராய்ச்சியாளர் குழு, ஒவ்வொரு வருடமும் சனி கிரகத்தில் 2.2 மில்லியன் பவுண்டு வைரங்கள் மழையாக பெய்யக்கூடும் என்று ஊகிக்கின்றது.

10. நீங்கள் பந்துகளை பறக்க வைக்க முடியும்

நீங்கள் பந்தை மேலிருந்து கீழே கைவிடும்போது அதை சுழற்றி விட்டால், அது காற்றினூடாக பறக்க முற்படும். இது மேக்னஸ் விளைவு (Magnus Effect) என்று அழைக்கப்படுகிறது. இவ்விளைவின் மூலமே டென்னிஸ் மற்றும் கால்பந்தாட்ட விளையாட்டுக்களை எளிதாக விளையாட முடிகின்றது.

11. நீர் ஒரே நேரத்தில் மூன்று நிலைகளிலும் (திண்மம், திரவம், வாயு) இருக்க முடியும்

இது Triple Boil என அழைக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு வெப்பநிலையில் ஒரே நேரத்தில் தண்ணீர் திண்மம், திரவம், மற்றும் வாயுவாக உள்ளது. கொதிக்கும் திரவத்தின் மூலக்கூறுகள் வாயுவாக உயரும்போது அத்திரவத்தின் வெப்பநிலை குறைந்து உறைவடைகின்றது. இந்த சுழற்சி தொடர்ச்சியாக நடைபெறும் பொழுதே Triple Boil எனும் நிலை உருவாகிறது.

12. பாலூட்டிகளில் ஒரே ஒரு விலங்குக்கு மட்டுமே இறக்கைகள் உள்ளன

அந்த பாலூட்டிகள் தான் வெளவால்கள். பறக்கும் அணில்களுக்கு மரங்கள் மற்றும் சரிவான இடங்களில் இருந்து குதிக்க முடியும், ஆனால் அவற்றிற்கு உண்மையிலேயே வெளவால்கள் போல் பறக்க முடியாது.

13. நிலவிற்கு வளிமண்டலம் இருந்திருக்கின்றது

அப்பல்லோ விண்வெளி வீரர்களால் சேகரிக்கப்பட்ட சந்திர மாதிரிகளின் சமீபத்திய சோதனைகள், சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதென வெளிப்படுத்தியது. இது டிரில்லியன் கணக்கான டன் எரிவாயுவை வெளியிட்டது. இவ்வாயுக்கள் வேகமாக விண்வெளிக்கு வெளியேற முடியாததால் வளிமண்டலமொன்று உருவாகி காலப்போக்கில் இவ்வாயுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விண்வெளிக்கு சென்று வளிமண்டலம் இல்லாமல் போனது.

14. சூரியப் பிழம்பு மிகவும் சக்திவாய்ந்தது

சூரியப் பிழம்பு வெளியிடும் சக்தியானது 100 மெகாடன் அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறும் அளவுக்கு சமமானது. பூமியின் வளிமண்டலமே நம்மை அந்த கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது.

15. விண்வெளியில் ஏப்பம் விட முடியாது

பூமியில் நீங்கள் ஏப்பம் விடும்போது, புவியீர்ப்பு விசை நீங்கள் சாப்பிடுகிற உணவிலிருந்து திடப்பொருட்களையும், திரவத்தையும் ஈர்த்துவிடுகிறது. அதனால் வாயு மட்டுமே வாயினூடாக வெளியேறுகிறது. விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில், வாயுவானது, திரவங்கள் மற்றும் திடப்பொருட்களிலிருந்து பிரிபடாமல் இருப்பதால் ஏப்பமாக வெளியேறாமல் வாந்தியாகவே வெளியேறும். இக்காரணத்தினால் விண்வெளி வீரர்களுக்கு சில உணவுகள் விண்வெளியில் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

16. உங்கள் உடலின் பாதி பாக்டீரியாக்கள் ஆகும்

ஆம். மனித உடலில் 39 டிரில்லியன் பாக்டீரியாக்கள் மற்றும் 30 டிரில்லியன் மனித உயிரணுக்கள் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பாக்டீரியாக்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை ஆகும்.

17. நிறக்குருடு நோய் பெண்களைவிட ஆண்களிலேயே அதிகம்

மிகவும் பொதுவான வகையான நிறக்குருட்டுக்கு காரணமான மரபணுக்கள் X குரோமோசோமில் காணப்படுகின்றன என தேசிய கண் நிறுவனம் விளக்குகிறது. பெண்களில் இரண்டு X குரோமோசோம்களில் ஒன்றுக்கு நிறக்குருட்டுக்கு காரணமான மரபணுக்கள் இருந்தாலும்கூட, மற்றொன்று அதை சரிசெய்கிறது. ஆண்களில் ஒரே X குரோமோசோம் மரபணுக்கள் காணப்படுவதால் அவை நிறக்குருடாகிவிடுகின்றன.

18. பிரபஞ்சத்தின் பெரும்பகுதியைப் பற்றி எமக்குத் தெரியாது

பிரபஞ்சத்தின் 96 சதவிகிதம், மனிதர்கள் இன்னும் கண்டறிய முடியாத இருண்ட விடயம் மற்றும் இருண்ட சக்தியை கொண்டது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஏனெனில் இந்த பொருட்களை உருவாக்கும் துகள்கள் ஒளியுடன் தொடர்பற்றது. நட்சத்திரங்கள், கிரகங்கள், மற்றும் பல விண்மீன் திரள்கள் ஆகியவற்றைப் பற்றி அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றபோதிலும், இவை ஒளியற்ற இருண்ட விடயமாகையால் இதைப்பற்றிய சரியான முடிவெடுக்க முடியாமல் உள்ளது.