பூகம்பம் என்பது பூமியின் மேல் ஓட்டில் சேமிக்கப்பட்ட ஆற்றல் திடீரென வெளியேறுவதன் விளைவாக ஏற்படும் நில அதிர்வு அலைகள் ஆகும்.
பூகம்பங்கள் நில அதிர்வு அளவீடு மூலம் அளவிடப்படுகின்றன. இது பொதுவாக நில அதிர்வு வரைபடம் என அழைக்கப்படுகிறது. ஒரு பூகம்பத்தின் அளவு வழக்கமாக ரிக்டர் அளவுகோல் முறையைப் பயன்படுத்தி கணிக்கப்படுகின்றது. இந்த அளவுகோலின்படி 3 அல்லது அதற்கும் குறைவான அளவு பூகம்பங்கள் பெரிதாக உணரப்படுவதில்லை, ஆனால் 7 இற்கு அதிகமான அளவு கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.
புவியோட்டின் மேற்பரப்பில் தட்டுக்கள் அசைவதன் மூலமோ அல்லது இடம்பெயர்வதன் மூலமோ அது பூகம்பமாக வெளிப்படுகின்றது. சில நேரங்களில் அவை சுனாமியை ஏற்படுத்துகின்றன. இது உயிரிழப்பு மற்றும் சொத்து அழிவுக்கு வழிவகுக்கின்றன.
பூகம்பங்கள் இயற்கையாகவோ அல்லது மனித நடவடிக்கைகளின் விளைவாகவோ ஏற்படலாம். எரிமலை செயல்பாடு, நிலச்சரிவுகள், குண்டுவெடிப்பு மற்றும் அணுசக்தி சோதனைகள் ஆகியவற்றால் சிறிய பூகம்பங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.

இயற்கையாக நிகழும் பூகம்பங்கள் பூமியின் ஓட்டிலுள்ள டெக்டோனிக் தட்டுகளுடன் தொடர்புடையவை. பூமியின் மையத்தில் உள்ள வெப்பத்தினால் எந்நேரமும் இந்த தட்டுகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தட்டுகள் ஒன்றையொன்று கடந்து செல்லும்போது அதன் எல்லைகள் உராய்வு அழுத்தத்தை உருவாக்குகின்றன. தட்டுகளின் விளிம்புகள் கடினமானவை என்பதால் அவை உராயும்போது சிக்கிக்கொள்கின்றன. இதன் போது சிக்கிக்கொண்டிருக்கும் தட்டுக்கள் விடுபட முற்படும் போதே பூகம்பம் ஏற்படுகிறது.
பூகம்பத்தின் மொத்த ஆற்றலில் 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே பூமியின் நிலத்தின் மீது பரப்பப்படுகின்றது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் ஏற்படும் பூகம்பங்களில் பெரும்பாலானவை பல்லாயிரம் கிலோமீட்டருக்கு ஆழத்திலேயே உருவாகின்றன. இதனால் பெருமளவான பூகம்பங்கள் இப்போதும் கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது நம் யாருமே அறியாத ஒரு விடயம். ஆனால் இந்த புவியோட்டின் தகடுகளின் எல்லைகளில் காணப்படும் இடங்களிலேயே குறைவான ஆழத்தில் பூகம்பம் ஏற்படுகின்றது. இதனாலேயே அது அந்த அதிர்வு விரைவாக பூமியின் மேற்பரப்பிற்கு வந்தடைகின்றது.
எரிமலைப் பகுதிகளிலும் பூகம்பங்கள் ஏற்படக்கூடும். அவை எரிமலைப் பிழம்புகளின் இயக்கத்தாலும் ஏற்படலாம். இத்தகைய பூகம்பங்கள் எரிமலை வெடிப்புகள் குறித்த ஆரம்ப எச்சரிக்கையாகவும் இருக்கலாம்.
பூகம்பத்தை கணிப்பது கடினம் என்பதால், பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பு மக்கள் பெரும்பாலும் வெளியேற வாய்ப்பில்லை. ஆனாலும் ஒரு பூகம்பத்தைப் பற்றி நீங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தால் பாதுகாப்பாக தப்பிக்க உதவும் சில விடயங்களை இங்கு பார்போம்.
- வீட்டினுள் இருந்தால் தரையில் படுத்து வலுவான மேசை போன்ற தளபாடங்களின் அடிப்பகுதிக்கு ஊர்ந்து செல்லவும். உங்கள் தலையையும் கழுத்தையும் ஒரு கையால் மூடி, மற்றொரு கையால் அந்த வலுவான பகுதியை பிடித்துக் கொள்ளுங்கள்.
- கதவுகளை வலுவாக வலுப்படுத்திய பழைய வீடுகளுக்கு இந்த முறை பொருந்தாது. ஆனால் இன்றைய கட்டடக்கலை தரநிலைகள் வேறுபட்டவை. இக்காலத்தில் பொருத்தப்படும் கதவுகள் உடைந்து விழ வாய்ப்புக்கள் உள்ளதால் மேசையின் அடியில் இருப்பது பாதுகாப்பானது.
- வாகனங்களில் செல்லும்போது மரங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் இல்லாத பகுதியில் நிறுத்துவது சிறந்தது.
- அதேபோன்று வெளியில் இருப்பதாயின் கட்டிடங்கள், தெரு விளக்குகள், மின் இணைப்புகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்லுங்கள்.